தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளிமலை. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள சுருளி அருவியின் அருகில் கைலாசநாதர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், பூதநாராயணன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளது.
மே மாதம் 4ஆம் தேதி அதிகாலை பூதநாராயணன் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலை இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு கோயில் வளாகத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு பூசாரிகள் அவர்களைப் பார்த்து சத்தமிட்டுள்ளனர்.
திருமண விழாவில் தீவிபத்து... 11 பேர் உயிரிழப்பு!
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாள், இரும்பு கம்பிகளைக் கொண்டு இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். இதில் சின்னமனூர் அருகேயுள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த பூசாரி மல்லையன்(65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த சாது பாலசுப்பிரமணி(59) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் உண்டியலை உடைக்கும் முயற்சியைக் கைவிட்டு, அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். இக்கொலைச் சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திவான்மைதீன், ராயப்பன்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் மாயன் கொண்ட தனிப்படையினர் ஆறு மாதமாக கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!
மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றிய கொலையாளிகளின் விரல்ரேகையை வைத்து தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் தீனா(20), அதே ஊரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் உட்பட 2 பேரை சந்தேகத்தின் பேரில் சுருளிப்பட்டிச் சாலையில் வைத்து காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோயில் உண்டியலை உடைக்கமுயற்சி செய்தபோது பூசாரி தடுக்க வந்ததாகவும், அதனால் பூசாரி மல்லையனை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, இளைஞர் தீனாவை தேனி மத்திய சிறையிலும், மற்றொரு குற்றவாளியான சிறுவனை மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கும் (சிறுவர் சீர்திருத்த பள்ளி) அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.