தேனி தொகுதியில் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்படும் பகுதி என்ற பெயர் ஒருபக்கம், மறுபக்கம் பட்டுவாடா செய்யப்படவிருந்த பணம் பறிமுதல் செய்ய நடந்த துப்பாக்கிச் சூடு என தேர்தல் களேபரத்துடன் காட்சியளிக்கிறது. இந்நிலையில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஓபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகனை வெற்றி பெற வைக்க வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, கூட்டணி கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய திமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், 'துணை முதல்வர் ஓபிஎஸ் வாக்காளர்களுக்கு சேலைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் 1000, 2000 என பணத்தை தாராளமாக வாரி வழங்குகிறார். தேர்தல் ஆணையம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓபிஎஸ் மகன் தோற்றுவிடுவார் என தெரிந்து வாக்குப்பதிவின்போது மாலை 3 மணிக்கு மேல் 500 குண்டர்களை வைத்து வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு, முகவர், அதிகாரிகளை மிரட்டி அவர்கள் இஷ்டத்திற்கு ஓட்டுப்போட திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்கு கிடைத்துள்ளது.
300 கோடி பணப்புழக்கம் தேனியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம். அதிக போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்றார்.
இந்த சந்திப்பில், தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட தலைவர் பெத்தாட்சி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.