நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களான பிரவின், ராகுல், அபிராமி, அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனி அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் பிரவின், பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதில் மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்காக மாணவர்கள் பிரவின், ராகுல் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய நாள்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நால்வரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, சிபிசிஐடி காவல் துறையினர் இன்று மீண்டும் விசாரணைக்காக நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களிடம் விசாரித்த நீதிபதி மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்தோடு, அக்டோபர் 25ஆம் தேதி நான்கு பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இந்நிலையில் நான்குபேரின் சார்பில் பிணை கேட்டு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் ஆஜராகததால் நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.