கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் வசிக்கும் உடல்நிலை சரியில்லாததை காண முடியாமல் தேனியில் தவித்துவந்த தங்கையை மதுரையில் இருந்து தேனிக்கு பழுதான சைக்கிளில் சென்று அழைத்துச் சென்ற சகோதரரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தினமணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, கணவரை இழந்த இவருக்கு ஜீவராஜ், பிரவீனா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் பிரவீனா தேனி அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கால் வருமானமின்றி சிக்கலை சந்தித்த தமிழ்ச்செல்விக்கு எதிர்பாராத விதமாக உடல் நிலை சரியில்லாமல் போகவே. தனது மகளை எப்படியாவது அழைத்து வர தனது மகனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, தேனிக்கு சென்று தனது தங்கையை அழைத்து வர முடிவுசெய்த ஜீவராஜ், தனது பழுதான சைக்கிளை எடுத்துகொண்டு நேற்று (ஏப்ரல் 20) காலை மதுரையிலிருந்து கிளப்பியுள்ளார். மதுரையில் இருந்து 80 கி.மீ., தூரமுடைய தேனிக்கு சைக்கிளில் பயணம் செய்த அவர் நள்ளிரவு தேனி வந்தடைந்தார். பின்னர் தனது சகோதரி பணிபுரியும் தனியார் மருத்துவமனை முன்பு இருந்த பயணியர் நிழற்குடையில் தங்கியிருந்து காலை மருத்துவமனை திறந்ததும் தனது தங்கையை அழைக்க வந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நிர்வாகத்தினர் அவரின் தங்கையை அழைத்துச் செல்ல அனுமதியளித்தனர். தங்கையை அதே பழுதான சைக்கிளில் கூட்டிச்செல்ல முடியாத நிலையில் காவல் துறையினரிடம் முறையிட, வாகனம் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து தனது சைக்கிளை தேனி காவல் நிலையம் முன்பு நிறுத்திவைத்துவிட்டு, காவல்துறையினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் அண்ணன், தங்கை இருவரும் மதுரை சென்றடைந்தனர்.
பாசப் போராட்டத்தில் 80 கி.மீ., தூரம் பழுதான சைக்கிளில் பயணம் செய்து தனது தங்கையை அழைக்கச்சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பார்க்க : கரோனாவுக்கு இலவச சிகிச்சை... மனு தள்ளுபடி