தேனி: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் விழா தொடர்பாக விழாவானது இன்று (ஜூன் 16) தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைகுளம், தென்கரை பேரூராட்சி பகுதிகளில் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேஷ்டி சேலை வழங்கப்படும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. தனியார் திருமண மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வேஷ்டி சேலையை வழங்கினர். ஆரம்பத்தில் டோக்கன்படி வரிசையாக சேலையை வாங்கி சென்ற பெண்கள், ஒருகட்டத்தில் சேலை குறைவாக இருந்ததையறிந்து பெண்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து இடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்த சேலை, வேஷ்டிகளை
அள்ளிச் சென்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகிகள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். ஒருவரே பல வேஷ்டி, சேலைகளை எடுத்துச் சென்றதால் டோக்கன் வைத்திருந்த பலருக்கும் சேலை வேஷ்டி கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பெண்கள் முணுமுணுத்தபடியே மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். பெண்கள் சேலை வாங்க முண்டியடித்து சென்றதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலையா?.. ஹெச்.ராஜா கேள்வி