தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை கோவையைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு துப்புரவு பணியாளர் ஜெயக்குமார் என்பவர் திரையரங்கில் அமர்ந்து தனது செல்போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கோவை PSG மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்த பார்த்திபன், மகேந்திரன், முருகேசன் மற்றும் மணி ஆகியோர் ஜெயக்குமார் தங்களின் குடும்ப பெண்களை தான் வீடியோ எடுத்து உள்ளதாக நினைத்து, அவரது செல்போனை பிடுங்கி கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதனால் ஜெயக்குமார் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவலர்கள் வந்து விசாரணை செய்த போது ஜெயக்குமாரின் செல்போனில் வீடியோ எதுவும் எடுக்கப்படவில்லை என்பதும், அவர் யூடியூப் பார்த்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து காயமடைந்த திரையரங்கு ஊழியர் ஜெயக்குமாரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து திரையரங்கு மேலாளர் சார்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவர் கார்த்திகேயன், பார்த்திபன், மகேந்திரன், முருகேசன், மணி ஆகிய 5 பேர் மீது பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆக்ஷன் படமான விக்ரம் பட திரையரங்கில் நடைபெற்ற ஆக்ஷன் காட்சி தேனியில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்கு ஊழியர்களை மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் அரைநிர்வாணமாக அட்டகாசம் செய்த போதை ஆசாமிகள்