மசினகுடி பகுதியில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக மசினக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்களை மாவட்ட சுகாதாரத் துறை பணி அமர்த்தியுள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்களின் பிரசவத்திற்கு தனி மருத்துவ மையமும் செயல்பட்டுவருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் இருந்த ஈ.சி.ஜி இயந்திரம் உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தன. எனினும், பல மாதங்களாக இந்த பழுதுகள் சரிசெய்யப்படாமல் இருந்ததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுவந்தனர்.
இதனையடுத்து மசினகுடி பொதுமக்கள் சார்பாக, சுகாதார நிலையத்திற்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கி நன்கொடையாக அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணியில் மசினகுடி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் ஈடுபட்டுவந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தாமாகவே முன் வந்து சுமார் 1.5 லட்சம் ரூபாயை அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த பணத்தைக் கொண்டு ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான ஒரு ஈ.சி.ஜி மருத்துவ கருவி, மின்சாரம் துண்டிக்கபட்டால் தொடர்ந்து மின் இணைப்பு கிடைத்திட ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான 2 பேட்டரிகளுடன் கூடிய இன்வெட்டர் கருவி, ஒரு வாட்டர் பியூரிபயர், நெபிலேசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கபட்டன.
அவ்வாறு வாங்கிய மருத்துவக் கருவிகளை நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட ஆரம்ப சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி, கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் ஆகியோரிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருவிகள் பொதுமக்கள் முன்னிலையில் ஒப்படைக்கபட்டன.
இதையும் படிங்க: கூண்டில் சிக்காமல் டிமிக்கி கொடுக்கம் சிறுத்தை - அச்சத்தில் மக்கள்!