நீலகிரி: Niligiris young Priest Education: நீலகிரி கோயிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்குத் தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோயில், 1994ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோயில் பசுக்களின் பாலை கறந்து, நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கோயிலில் இருந்துகொண்டே படிக்கும் சிறுவன்
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கோயில் மரபுப்படி சிறுவன் கோயிலை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் வீடு தோறும் கல்வி திட்டம் மூலம் அச்சிறுவன் தற்போது மூன்றாம் வகுப்பு படிப்பதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இ.எம்.ஐ.எஸ். எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிறுவனுக்குத் தடையற்ற கல்வி கிடைக்க வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறுவனுக்குத் தொடர்ந்து கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
சிறுவனின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிந்தால் குழந்தைகள் உரிமைகள் பாதுக்காப்பு ஆணையத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:Covid-19 awareness christmas hut: புதுச்சேரியின் புதுமையான கிறிஸ்துமஸ்