தஞ்சாவூர்: சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி விரும்பி உண்ணும் பொருளாக இருப்பது சாக்லேட். அது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதனை காட்டிலும், அது நல்ல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறிப்பாக கோக்கோ நிறைந்த சாக்லேட்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் என்கிற மூலப்பொருள் நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதுடன் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் கொண்டது. சாக்லேட் உண்பதால் மூளையின் செயல்பாடு கூர்மையாகிறது என்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 07ஆம் தேதி சர்வதேச சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கும்பகோணம் அருகேயுள்ள கொரநாட்டுக்கருப்பூர் பகுதியில் உள்ள கார்த்திக் வித்யாலயா பன்னாட்டுப்பள்ளி இளம் சிறார்கள் சாக்லேட் தோடு, சாக்லேட் வளையல், சாக்லேட் மாலை, சாக்லேட் உடை, கொலுசு, நெத்திச்சுட்டி, கீரிடம் சாக்லேட் நெக்லக்ஸ் ஆகியவற்றால் தங்களை அழகாக அலங்கரித்து வந்தனர்.
மேலும் சில சிறார்கள் கிட்கேட், டைரி மில்க், காப்பிகோ, எக்லேர்ஸ், மேங்கோ பைட், மில்கி பார் போன்றவற்றை உடை போல அணிந்து வந்து அனைவரையும் பரவசப்படுத்தினர். மேலும் பள்ளி கலையரங்கில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித விதமான சாக்லேட்களை கொண்டு பல்வேறு வடிவங்களாக அழகாக அலங்கரித்திருந்தனர்.
மேலை நாட்டு சாக்லேட் வகைகளை மட்டுமின்றி, நமது பாரம்பரிய இனிப்பு மிட்டாய் ரகங்களான, கடலை உருண்டை, கடலை மிட்டாய் கேக், தேன் மிட்டாய், தேங்காய் கேக், ஜவ்வு மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை, கமார்கட் என பல வகைகளான இனிப்பு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
மேலும் சாக்லேட் தினத்தையொட்டி நடனம், குழு நடனம், பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகியவையும் நடந்தது. இதில் சிறப்பிடம் பெற்றவர்களை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் பரிசுகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். இதில் ஏராளமான சக மாணவ மாணவியர்களும், ஆசிரியர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களை கைதட்டி உற்சாகம் மூட்டினர்.
இதையும் படிங்க: Video:ருசியான பவுல் சாக்லேட் கேக் ரெசிபி