தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர், கரோனா ஊரடங்கு சமயத்தில், அங்கிருந்த வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடியுள்ளனர்.
பின்னர், அங்குள்ள வயல் காட்டில் வேட்டையாடிய முயலை சமைத்து விருந்து நடத்தி உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், தாங்கள் செய்யும் தவறை உணராத அவர்கள், இதனை படம் பிடித்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ் மற்றும் வனத்துறை ஊழியர்கள், மாணவர்கள் 6 பேரையும் கொத்தாக அள்ளிச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், 6 பேரும் மைனர் சிறுவர்கள் என்பதாலும், பள்ளி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், சிறைக்கு அனுப்பாமல், வழக்குப் பதிவு செய்து, தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேருக்கும் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். முயலை வேட்டையாடிய ஆறு பேரும் 90 ஆயிரம் ரூபாயை செலுத்தியபின் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் பிடிங்க: விழுப்புரத்தில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள்!