தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே அபிமுகன் தர்மசாலையில் கிளி ஒன்று 64 நாயன்மார்களுள் ஒருவரான அமர்நீதி நாயனார் குருபூஜையின்போது வந்து நீண்ட நேரமாக அமர்ந்திருந்ததை கண்டு அப்பகுதியினர் வியந்தனர்.
கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில் பிடாரி குளம் எதிரேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனியில், அபிமுகன் தர்மசாலை உள்ளது. இங்கு 64 நாயன்மார்களுக்கும் அவரவர் திருநட்சத்திர நாள்களில் குரு பூஜைகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆனி மாத மகம் நட்சத்திர தினமான நேற்று முன் தினம் (ஜூலை3) மாணிக்கவாசகர் குரு பூஜை செய்தனர். தொடர்ந்து நேற்றுமுன் தினம், ஆனி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு அமர்நீதி நாயனார் குருபூஜையும் நடைபெற்றது.
அப்போது, எங்கிருந்தோ திடீரென பறந்து வந்த பச்சை கிளி ஒன்று, பூஜையின் முன்பு வைக்கப்பட்டிருந்த அமர்நீதி நாயனார் திருவுருவப்படத்திற்கு முன்பு நீண்ட நேரம் அமர்ந்து கொண்டதைக் கண்டு அங்கு திரண்டிருந்த அடியார்கள் ஆச்சரியமடைந்தனர்.
அத்துடன் அந்த பச்சை கிளி, அங்கிருந்தவர்கள் அளித்த வாழைப்பழம், சப்போட்டப் பழம், பிஸ்கெட் ஆகியவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தது. மேலும், அக்கிளி ஒரு சில வார்த்தைகளையும் உச்சரித்தது. தொடர்ந்து அக்கிளியானது, பூஜை அறை பகுதியை விட்டு வெளியேறாமல், பல மணி நேரமாக அங்கேயே இருந்ததை ஏராளமானோர் அதிசயமாக வியந்து பார்த்தனர்.
இந்த தர்மசாலையின் மூலமாக நாள்தோறும் காலை மற்றும் மதியம் என இருவேளையும் உரிய துணை இல்லாமல் இருக்கும் முதியோர் உடல்நலம் குன்றியோர், தொடர்ந்து சமைக்க வழியில்லாமல் இருப்போர் என 200-க்கும் மேற்பட்டோருக்கு அவரவர் இருப்பிடத்திற்கே நேரில் சென்று அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொல்லிமலை கோயிலுக்கு 'இப்படி' ஒரு பெயர் இருப்பதற்கு காரணம் இதுதான்.. அறியப்படாத சில வரலாறு!