உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்தியளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, பட்டுகோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பரவல் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீதிமன்றம், காவல் நிலையம் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என, பலரும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய 3 இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட 26 நபர்களுக்கு இன்று(ஆக.6) ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 26 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தஞ்சை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான அலுவலர்கள் பணியாற்றிவந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவர்களது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில், அதிக பாதிப்பு எண்ணிக்கை பட்டுக்கோட்டையில் மட்டுமே பதிவாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதுவரை அங்கு 375க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக பட்டுக்கோட்டையின் நகர் பகுதியில் மட்டும் இன்று வரை 238 பேர் பாதிக்கப்பட்டும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். பெருகி வரும் கரோனா நோய்த்தொற்றால் பட்டுக்கோட்டை மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.