டெல்லியைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்த அந்தப்பெண், சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு கடந்த 2018ஆம் ஆண்டு டிச.1ஆம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்தார். முதன்முறையாக கும்பகோணம் வந்ததால், அந்த பெண்ணுக்கு சரியான திசைகள் தெரியவில்லை. நள்ளிரவு 11 மணிக்கு வந்த அந்த இளம்பெண் தான் ஏற்கெனவே தங்குவதற்கு திட்டமிட்ட அறைக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாமல் ரயில்நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தினார்.
ஆட்டோ ஓட்டுநரும் அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டார். அவர் ஆங்கிலத்தில் தான் செல்ல வேண்டிய முகவரிக்குச் செல்லுமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநர் அவரை பைபாஸ் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் திசைமாறி செல்கிறீர்களா என கேட்டுவிட்டு, தன்னுடைய நண்பருக்கு போன் செய்துள்ளார். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுநர் அவரை அங்கேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண் தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்திலிருந்து சாலையில் நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். தொடர்ந்து மற்றொரு நண்பரும் சேர்ந்து கொண்டு வந்துள்ளனர்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் பைபாஸ் சாலைக்குச் சென்று அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞர்கள் தங்களுடைய நண்பர்கள் இருவரை வரவழைத்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டும் அவரை அடித்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து உள்ளார்.
சம்பவத்திற்குப் பின் விடுதி அறைக்குச் சென்று தங்கிய அவர், மறுநாள் தன்னுடைய தோழிகளிடம் நடந்த சம்பவத்தை கூறியதும், தகவல் பரவி வங்கி நிர்வாகத்துக்கு சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் கும்பகோணம் வந்தனர்.
வங்கி நிர்வாகம் காவல் துறையிடம் இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரிக்குமாறு கேட்டுகொண்டதன் பேரில், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை கூறினார். அதன்பிறகு தாராசுரத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது, தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த இளைஞர் பேசியதை கூறியதும், அந்த செல்போன் யாருக்கு சென்றது என்பதை வைத்து காவல் துறையினர் துப்பு துலக்கினர். இதில் டெல்லி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பகோணத்தைச் தினேஷ் (26), வசந்த்குமார் (23), புருஷோத்தமன் (21), அன்பரசன் (21) மேலும் காமராஜர் சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி (26) ஆகிய ஐந்து பேரையும் கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் கைது செய்தார்.
இந்த வழக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பினை வழங்கிளார். தீர்ப்பில் குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நால்வருக்கும் சாகும் வரை சிறை தண்டனை, தலா 65 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க...தமிழ்நாடு எஸ்.ஐ. கொலை: கேரளாவில் சதித்திட்டம்!