தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரப் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கக்கூடிய நிலையில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர்.
இதனையடுத்து பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சாலையை விரிவாக்கம் செய்யாமல் 2019ஆம் ஆண்டு திருவையாறு ஒட்டியுள்ள கண்டியூர், அரசூர், திருப்பந்துருத்தி, காட்டுக்கோட்டை உள்ளிட்ட ஆறு கிராமங்களில் 100 ஏக்கர் விளைநிலத்தைக் கைப்பற்றி புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அலுவலர்கல் முற்பட்டனர்.
ஆனல் இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்ததால், நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது விவசாயிகளுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலையும் வழங்காமல் சாலை பணிக்காக விளைநிலங்களில் குறியீடு அமைப்பது, கொடி நடுவது உள்ளிட்ட பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இதனைக் கண்டிக்கும்விதமாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வயல்களில் கறுப்புக் கொடியை கட்டி, கையில் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகும் அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் சாலை மறியல் உள்ளிட்ட பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:'புகாரா கொடுக்குற...' கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்!