சோலார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி என்பவர் தலைமையில் விவசாயிகள், பெண்கள், ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலத்திற்கு திரண்டுவந்து முற்றுகையிட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை வட்டாட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனர். இதன் பின்னர் ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்துவிடம் 30 பேர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "ஆலங்குளம் பகுதியை அடுத்த நெட்டூர் கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான 12.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் பருவ காலங்களில் விவசாயம் செய்துவருகின்றோம். எங்களுக்குச் சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டு மோசடியாக வேறொருவருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சோலார் மின் நிலையம் அமைக்கும் முயற்சியும் நடைபெற்றுவருகிறது.
எங்களுக்குச் சொந்தமான இடத்தில் சோலார் மின் நிலையம் அமைக்கக் கூடாது. எங்களுடைய சர்வே எண்ணின்படி நிலத்திற்கான உரிய ஆவணங்களைப் பார்வையிட்டு அரசு அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மோசடி செய்யப்பட்ட நிலங்களையும் மீட்டுத் தரவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் நெட்டூர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் கலைந்துச் சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க... சோலார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் சாலை மறியல்