கடந்த ஆறு மாத காலங்களாக, கரோனா தொற்று, ஊரடங்கு ஆகியவை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. தற்போது படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நவம்பர் 14ஆம் நாள் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனால் கரோனா அச்சமின்றி வணிகர்களும் நுகர்வோர்களும் தீபாவளி பண்டிகை விற்பனையிலேயே அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டி வருகிறது. மாவட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், சாலையோரக் கடைகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகளை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
கரோனா காலகட்டத்தில் சாலையோர வியாபாரிகள் வருவாய் இழந்து தவித்த நிலையில், பண்டிகைக்கால விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்கவும், திருட்டுச் சம்பவங்களை தடுக்கவும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு ஒளியேற்றும் பசுஞ்சாண விளக்குகள்!