தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லைராஜ். இவர் சென்ற ஒன்பது வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பணியாற்றி வரும் முல்லை ராஜ் நேற்று முன்தினம் (அக.11) பணியில் இருந்தபோது திடீரென இறந்து விட்டதாக, அவரது தாய் அழகம்மாளுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.
இதைக்கேட்டு அதிச்சியடைந்த அவரது தாயார் நடந்தவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள அழைப்பு வந்த எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த தாயார் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தனது மகன் இறப்பிற்கான உண்மை தன்மையை தெரிந்த கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டம் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாவட்ட நிர்வாகம் விசாரித்ததில், "முல்லைராஜ் இறந்த தகவல் உண்மையானது. அவரின் உடல் ஜம்மு காஷ்மீரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வரவழைக்கப்படும். தொடர்ந்து சாலை மார்க்கமாக திருநெல்வேலி வழியாக ஆயாள்பட்டி கிராமத்திற்கு வர உள்ளது" என்பது தெரியவந்தது.
இந்நிலையில் ராணுவ வீரரின் குடும்பத்தினர், உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் முல்லை ராஜ் இறப்பிற்கான விளக்கம் கேட்டு திருநெல்வேலி, சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே ராணுவ உயர் அலுவலர் சக்திவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடற்கூறு ஆய்வு அறிக்கையின் தகவல் தெரிவிக்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு ராணுவத்தில் வேலை, நிவாரண நிதி ஆகியவை கண்டிப்பாக வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் முல்லைராஜ் உடலானது அவர்களது சொந்த தோட்டத்தில் வைத்து இறுதி மரியாதை செய்து தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சிலுவம்பாளையத்தில் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம்!