நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்திருந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "கரோனா பரவலை தடுக்க கட்டாயம் ஊரடங்கு தேவை. ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்கள் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து தகுந்த உதவி தொகைகளை மத்திய, மாநில அரசு வழங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 வழங்கியிருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து.
ஆனால் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. ஊரடங்கால் தொழில் பாதிப்படையும் நிலையில் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்திருக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிதி எந்த பலனும் யாருக்கும் சென்றடையவில்லை. அரசு அறிவித்த 20 லட்சம் கோடியில் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஒருவராவது பயன் அடைந்தது உண்டா?
பாஜக அரசின் தற்போதைய ஒரு வருட ஆட்சியில் காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றிருக்கிறது.
நாடாளுமன்ற கூட்டத்தை காணொலி மூலமாவது நடத்தியிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மத்திய, மாநில அரசுகள் கரோனா குறித்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எதுவும் செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக முதலமைச்சர் சொல்வது கட்டுக்கதை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை. இதில் முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்திரத் திட்டத்தை நிறுத்திய ரிசர்வ் வங்கி - ப. சிதம்பரம் காட்டம்