சிவகங்கை: சிவகங்கை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் இன்டர்நெட் சேவை மையம் நடத்தி வருபவர் பாலமுருகன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுதடைந்துள்ளது. இதனையடுத்து தற்போது வரை வீட்டின் பின்புறம் தனது இருசக்கர வாகனத்தை அவர் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.5) இரவு அவரது செல்போனிற்கு, ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறையிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவரும், பின் அமர்ந்திருந்தவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி, பழுதடைந்து கிடந்த இருசக்கரவாகனத்துக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், குறுந்தகவல் குறித்து காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து ஓரமாக கிடக்கும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடங்கியது இரவு நேர ஊரடங்கு: காவல் துறை பாதுகாப்புப் பணிகள் தீவிரம்