கடந்த 2016ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். ஆனால், காவல்துறையினரின் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகிக்கக் கூடாது என காவல்துறையினர் நந்தினியையும், அவரது தந்தையையும் கண்டித்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நந்தினியிடம் நீதிமன்றத்தில் வழக்குக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று நீதிபதி கூறியும், ”மதுபானம் உணவு பொருளா? மருந்து பொருளா? போதை பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி அல்லவா, இதைக் கேட்ட என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது” என்று ஆவேசமாகப் பேசினார்.
இதனையடுத்து சமூக ஆர்வலர் நந்தினி மீதும், அவரது தந்தை ஆனந்தன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.