சிவகங்கையை அடுத்த பாசாங்கரை கிராமத்தில் ஜீவசமாதி அடையப்போவதாக இருளப்பசாமி என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவித்தார். அதோடு இல்லாமல் சமூக வலைதளங்களிலும் இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் 13ஆம் தேதி இரவு 12 மணி முதல் காலை ஐந்து மணிவரை அவர் ஜீவசமாதி அடைவதை காண்பதற்காக காத்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் அங்கு கூடினர்.
ஆனால், அவர் கடைசிவரை ஜீவசமாதி அடையாமல் மக்களை ஏமாற்றினார். அவரிடம் ஆசி பெறுவதற்காக வந்திருந்த மக்கள் அவர் வைத்திருந்த உண்டியலில் உழைத்து சம்பாதித்ததை இரைத்தனர். மற்ற சாமியார்களைப் போல், இவரின் உண்டியலும் நிரம்பி வழிந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜீவசமாதி அடைவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட ஏழு பேர் மீது சிவகங்கை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.