சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரண்மனை சிறுவயலைச் சேர்ந்தவர் மஜீத். கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் இவர், தனது காரில் சிவகங்கையிலிருந்து காளையார்கோவில்-கல்லல் சாலை வழியாக தனது ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காலக்கண்மாய் என்ற இடத்தில் காரில் தீப்பற்றியுள்ளது.
அதை கவனிக்காமல் சென்றுகொண்டிருந்த மஜீத், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கூறியதையடுத்து காரை நிறுத்தி அதிலிருந்து உடனடியாக வெளியேறி தப்பித்தார். ஒரு இடத்தில் பற்றியிருந்த தீ, சிறிது நேரத்தில் மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு நிலையத்தினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.