சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், தீவட்டிப்பட்டியில் நடைபெற இருந்த சாலைப் பணியை செய்ய பிக்கப் வேனில் சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வேன், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் எதிரே சாலை பிரிவில் சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, வேனின் டிரைவர் வண்டியை நிறுத்த முயற்சித்தார் .
அப்போது நிலை தடுமாறிய வேன் சாலையின் வலது பக்கமாக, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில், எடப்பாடியைச் சேர்ந்த மெய்வேல் (60), மணிகண்டன் (8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பெண்கள் உட்பட 15 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணீகர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு