சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள சந்திரா கார்டன் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், குளிப்பதற்காக வீட்டின் குளியல் அறை சென்ற போது "விமல் ஆளுங்க காப்பாத்து ஹரி" என்று ரத்தத்தினால் சுவற்றில் எழுதப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உடனே இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்தக் கறையால் எழுதப்பட்டிருந்த வாசகம் குறித்து ஹரிஹரனிடம் விசாரணை செய்தனர். மேலும் ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் இருந்த தடயங்களை சேகரித்தனர். சுவரில் எழுதப்பட்டிருந்த விமல் என்பவர் ஹரிஹரனின் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது பெயரை ஏன் தமிழ்ச்செல்வி எழுதி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.