சேலம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் .
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரியசாமி," கூட்டுறவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்ட பல்வகை சேவை வழங்கும் மையமாக மாற்றப்படும்.
பயிர்க்கடன், நகை கடன், சுயதொழில் கடன் வழங்குவதில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துறை சார்ந்த அலுவலர்கள் தரும் தகவலின் அடிப்படையில் நிச்சயம் முறைகேடுகள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
கூட்டுறவு சங்கங்கள் , நியாய விலைக் கடைகளில் செய்யப்படவுள்ள பணி நியமனங்கள் வெளிப்படையாகவே இருக்கும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்தால் 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களில் கல்விக் கடன், வாகன கடன், வீட்டுக் கடன், சுயதொழில் கடன் என அனைத்து வகையான கடன்கள் வழங்கப்படும்.18 வயது பூர்த்தியான அனைவரையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி நிச்சயம் கூட்டுறவு சங்கங்களில் மக்கள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்"என்றார்.
இதையும் படிங்க : ஓட்டேரியில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா - ஆய்வுசெய்ய நீதிமன்றம் உத்தரவு