மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த எல்சிகா பானர்ஜி என்ற இளம்பெண், பெங்களூருவில் தங்கி கல்லூரி பயின்று வருகிறார். இவர், சில வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அரைகுறை ஆடையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சாலைகளில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர், ஓமலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர். ஆனால் அந்தப் பெண், காப்பகத்தில் தன்னுடன் தங்கியிருந்த மற்ற பெண்களின் தலை முடியை வெட்டி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறிய பாதுகாப்பாளர், அந்த பெண்ணை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (மே 16) இரவு அனுமதித்தார்.
இந்நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், கழிப்பறைகள் சுத்தமாக இல்லை எனவும் கூறி அப்பெண் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனை முதல்வர், கண்காணிப்பாளரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொண்டு சிறுநீரக மருத்துவ ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள ஜன்னல் சிலாப் மீது அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.
மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்தப் பெண் சமாதானம் ஆகவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினருடன் விரைந்து வந்து இளம்பெண்ணை பத்திரமாக மீட்டு, கை கால்களை கட்டி மயக்க ஊசி செலுத்தினர். இதன்பின்னர் அப்பெண் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் சுவர் மேல் ஏறி மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள்