சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி அருகிலுள்ள பகுதிகளில் தற்போது, பல இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டி எரிக்கப்பட்டுவருகிறது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், சேலம் நகர், புறநகர் சாலைப் பகுதிகளில் செயல்படும், பல்வேறு மருத்துவமனைகளில் வெளியேற்றப்படும் கழிவை, அங்கு கொட்டி எரிக்கின்றனர்.
மருத்துவக் கழிவு கொட்டப்படுவதால் காற்று வீசும்போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சிறுவர் முதல் முதியோர் வரை நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, தேக்கம்பட்டி கவுன்சிலர் சிவஞானவேல், "ஓமலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன. மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தீவைத்து அவ்வப்போது எரிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
அங்கே வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தும் உள்ளனர்.
இப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் விஷமாக்கி உள்ளது. இதனால் அந்தப் பகுதி தண்ணீரைப் பயன்படுத்த முடியாதா நிலையில் உள்ளது. இது குறித்து ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குப்பைக் கிடங்கை இடம் மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'போதை ஆசாமிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்': பள்ளிக்குழந்தைகள் ஆட்சியரிடம் கண்ணீர் மல்கப் புகார்!