கரோனா தொற்றின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர், தாரமங்கலம், ஓமலூர், சேலம் புதிய பேருந்து நிலையம், எடப்பாடி, மேச்சேரி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 47 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து அவர்கள் இன்று மாலை வீடு திரும்பினர்.
அவர்களை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்புச் சக்தி, சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் பரவி வருவதால் மாவட்ட எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.