திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மார்ச் 25ஆம் தேதி தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக எம்.பி., ஆ.ராசா தரக்குறைவாகப் பேசியது குறித்த காணொலிகள் வெளியாகின. இவரின் இந்த பேச்சைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியும், ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் திரண்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர், ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களை சந்தித்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கூறுகையில் ,"தலித் சமூகத்தைச் சார்ந்த ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவரின் தாயாரையும் இழிவாகப் பேசியதை ஒருபோதும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஏற்காது. அவருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அநாகரீகமாக பேசும் அவரை உடனடியாக தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ராசாவைக் கைது செய்யும் வரையில் தொடர் போராட்டம் நடத்துவோம். கண்ணியமிக்க தலைவராக முதலமைச்சராக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமியை இழிவாக ராசா பேசியதை, திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை" என்றார்.