சேலம்: ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானம் மூலம் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து சேலம் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையம் வரவிருந்த முதலமைச்சரிடம் புகார் மனு அளிப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக பிரமுகர் லட்சுமி என்பவர் விமான நிலையம் அருகே காத்திருந்தார்.
இதனை அறிந்த காவல் துறையினர் லட்சுமிக்கு அனுமதி மறுத்து அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த லட்சுமி, "அமைச்சர் பெஞ்சமின் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியாத வகையில் நெருக்கடிகளைக் கொடுக்கிறார்.
அவர் மீது இதுவரை 30 புகார் மனுக்களைக் கொடுத்திருந்தேன். ஆனால் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். அதிமுக ஆட்சியில் அக்கட்சியைச் சேர்ந்த எனக்கே காவலர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் யார் அளிப்பார்கள்?" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
காவல் துறையினர் திரும்பி செல்லும்படி அறிவுறுத்தியதையடுத்து, லட்சுமி அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: இந்தியாவின் மிஸ் திருநங்கையாக வாகைச்சூடிய சைனி சோனி