அழுக்குப் படிந்த சுவர், அசுத்தமான சூழல், அச்சுறுத்தும் நடவடிக்கை - இவை சிறைச்சாலைகள் என்றவுடன் நம் மனத்தில் தோன்றி முகத்தைச் சுழிக்கவைக்கும் காட்சிகள். அப்படியான சித்திரிப்புகள்தான் சிறைக்குச் சென்றவர்களை நம்மிடமிருந்து விலக்கிவைக்கும் மதில்களாக நிமிர்ந்து நிற்கின்றன.
இந்தச் சித்திரிப்புகளையெல்லாம் அகற்றி சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறைச்சாலைகளை நம் கண்முன் காட்டுகிறார் ராணிப்பேட்டை முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன்.

ராணிப்பேட்டையில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சுவர்களில் சிலர் கண்கவரும் ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று கேட்டபோது, இது மாவட்ட கண்காணிப்பாளரின் முயற்சி என்றும், இதுபோன்று காவல் நிலையங்களில் உள்ள கைதிகள் அறையிலும் கருத்துள்ள ஓவியங்களை வரைந்துள்ளதாகவும் கூறினர்.

உடனே உயர் அலுவலரின் அனுமதியுடன் ஈடிவி பாரத்தின் சார்பாக பிரத்யேகமாக அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது இன்னும் பல சர்ப்ரைஸ் நமக்காக காத்திருந்தன. அறை முழுவதும் சத்தான கருத்துகளும் முத்தான ஓவியங்களும் நிறைந்து உற்சாகத்தை ஊட்டின.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 21 காவல் நிலையங்களிலும் அங்குள்ள கைதிகள் அறையிலும் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நிப்பான் பெயிண்ட் நிறுவனம், தன்னார்வலர்களிடன் உதவியுடன் இதற்காக 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் ஆலோசனைக் கூடம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் மட்டுமின்றி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கென ஒரு சிறிய பூங்கா, போக்குவரத்து விதிகளை விளக்கும் ஓவியங்கள் சூழ்ந்த போக்குவரத்து காவல் நிலையம் எனப் புத்தாக்கம் தரும்விதமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து பேசிய முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் ஆவேசத்தில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படும் அவர்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதோ என்று எண்ணியே அதைத் தொலைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கைத் தரும்விதமாகத்தான் இந்த மாற்றம். காவல் நிலையங்களும் கைதிகளும் சபிக்கப்பட்ட இடமாகப் பார்க்கப்பட்டது போதும்; இங்கிருந்தும் சாதனைகள் பிறக்கலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
குறிப்பாக ராணிப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் வரையப்பட்டிருந்த புத்தர் ஓவியம் உள்பட பல ஓவியங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஓர் புதிய அத்தியாயத்தை அடையாளம் காட்டுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாழ்க்கை அப்படியே முடிந்துவிடாமல் அவர்களுக்கு ஒரு புதுமையைக் காண்பிக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.'போதிமரத்தால்தான் புத்தர் என்பது இல்லை. புத்தரால்தான் அது போதிமரம்' - ராணிப்பேட்டை காவல் துறையின் நடவடிக்கையும் இப்படித்தான்!
இதையும் படிங்க: EXCLUSIVE: 'தலைசிறந்த அலுவலர்களை உருவாக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி'