ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பூமிநாதன் என்பவர் வாகன திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி வள்ளி வீட்டில் தையல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினரிடையே பரவலாக பேச்சுகள் எழுந்தது.
இது குறித்து பிரப்பன் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், வள்ளியின் வீட்டை உச்சிப்புளி போலீசார் நேற்று மாலை சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக ஆயுதம் பதுக்கல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வள்ளி மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.