கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு நிலை உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், கோட்டாறு இளங்கடையை சேர்ந்த தவுபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் கைது செய்தனர். இந்த இருவரையம் 10 நாட்கள் காவலில் எடுத்த க்யூ பிரிவு காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி மற்றும் ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இளங்கடையில் உள்ள தவுபீக்கின் வீடு, திருவிதாங்கோட்டில் உள்ள ஷமீமின் வீடு ஆகியவற்றில் இருவரையும் தனித்தனியே அழைத்து சோதனை நடத்திய தனிப்படை காவல் துறையினர் அங்கிருந்து இருவரின் தீவிரவாத தொடர்புகள் குறித்த முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றினர்.
![Wilson Murder Case: Police plan to extend the custody of offenders](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5885972_knk.png)
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்ட இருவரின் காவல் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. அன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன்பு தவுபீக்கும், அப்துல் ஷமீமும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் இருவரிடமிருந்து வெளியாகி வரும் நிலையில், மேலும் விசாரித்தால் பல உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே நீதிமன்ற காவலை மேலும் நீட்டிக்க கேட்டு போலீஸார் நாளை மறுநாள் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தீவிரவாதிகள் இருவருக்கும் எதிரான ஆதாரங்கள், ஆயுதங்கள் மற்றும் தகவல்கள், வாக்குமூலம் அடங்கிய ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆவணங்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க : இந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத்