இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி என்கிற தொழில் நகரம். இது ஆங்கிலேயர்கள் காலத்திலேயே மிகப்பெரிய வணிக தலமாக இருந்தது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கடல் போக்குவரத்தில் தனுஷ்கோடி நகரம் பெரும் பங்காற்றியது.
1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனுஷ்கோடியில் ஏற்பட்ட பெரும் புயல் காரணமாக உருவாகிய ஆழிப்பேரலையில் தனுஷ்கோடி நகரமே சின்னாபின்னமானது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
நேற்றுடன் தனுஷ்கோடியை புயல் தாக்கி 55 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போதும் தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் வழியே செல்லும்போது இருமருங்கிலும் புயலினால் சிதைந்த கட்டங்கள் நமக்கு எடுத்துச் சொல்லும்.
குறிப்பாக பழைய மாதா ஆலயம், ரயில் நிலையம், தண்டவாளங்கள் புயலினால் அழிந்த கட்டடங்கள் புயலின் கோரத்தை நமக்கு எடுத்துக் கூறும். கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான பகுதியில் சாலை அமைத்தது.
இது சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளை சென்று பார்ப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான ஆம்புலன்ஸ், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பெருமளவு சிரமத்திற்கு ஆளாவதாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இங்குள்ள சிதைந்த கட்டடங்கள் உப்புக் காற்றினாலும், மணல் அரிப்பினாலும் அழிந்துவருகின்றன. 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் புயலின் கோர முகத்தை பார்ப்பதற்கு சாட்சியாக இருக்கும் இந்த கட்டடங்களை அரசுகள், வருங்கால சந்ததிக்கு இப்படி ஒரு தொழில் நகரம் இருந்தது என்பதை எடுத்துக் கூறும் வகையில் சீரமைத்து, முறையாக பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: