ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரேஸ் வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த முறையினால் கடல்வளம் அழிவதுடன் பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தால் இலங்கை கடற்படையினர் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாலும் மீன்வளத்துறை அலுவலர்கள் கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி வலை, சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராமேஸ்வரம் மீனவளத்துறை அலுவலரிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததை கண்டறிய ராமேஸ்வரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி தலைமையில் அலுவலர்கள் குழு இந்திய கடற்படையுடன் இணைந்து சில நாள்களாக கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முப்பது விசைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. அவற்றில் ஒரு படகிலிருந்து இரட்டை மடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய 30 விசைப்படகுகளையும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து அந்த விசைப்படகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளுடன் மீனவர்கள்; அதிகாரிகளைக் கண்டவுடன் தப்பியோட்டம்!