ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூலை 29ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி நின்றது. அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் அவர்கள் பயன்படுத்திய படகையும் சிறைப்பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை ஒரு வார காலம் வவுனியா சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏழு மீனவர்களையும் விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 17ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.