ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததில் சிறுமிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது அதே பகுதியில் 72 வயது மூதாட்டிக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முடிவு வருவதற்குள் மூதாட்டி இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த தெருவில் வீடுகள் நெருக்கம் மிகுந்து இருப்பதால், சிறுமி மற்றும் மூதாட்டி ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 நபர்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.