ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இக்கிராமத்தில் கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மேலாகக் கன்னிப்பெண் இறந்த காட்டுப் பகுதியில் பீடம் அமைத்து, எல்லைப்பிடாரி அம்மனாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லைப் பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுவருகிறது.
இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு வழிபடுவர். நள்ளிரவில் வழிபாடு தொடங்கி, பச்சரிசி சாதம் சமைத்து அதை உருண்டைகளாகப் பிடித்து, 100 ஆடுகளைப் பலியிட்டுச் சமைத்து, படையலிட்டு உண்ணும் விநோத வழிபாடு தற்போதும் தொடர்கிறது. இந்த ஆண்டு இவ்விழா சமீபத்தில் நிறைவுபெற்றது.
இத்திருவிழாவில் பருவமழை பெய்து, விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும், நோய் தாக்கம் இன்றி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் வேண்டுதல்களை வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவில் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்குப் படையலிட்ட பச்சரிசி சாத உருண்டைகள், ஆட்டுக்கறிகள் பரிமாறப்பட்டன. அனைவரும் உண்டபின் எஞ்சிய உணவுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பதால், அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்துவிட்டனர். நவீனக் காலத்திலும் இதுபோன்ற விநோத சடங்குகள் நடைபெறுவது வேடிக்கையாக உள்ளது.