ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். இதில் சில மீனவர்கள் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர்.
இந்த தகவல் மீன்வளத் துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்றிரவு இந்திய கடற்படை படகு மூலம் கடல் பகுதிக்கு திடீர் ரோந்து மேற்கொண்டனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மீன்வளத் துறை அலுவலர்கள், அவர்களின் படகுகள் நோக்கி செல்வதற்குள் மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு படகுகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மீன்வளத் துறையினரும் இந்திய கடற்படையினரும் வலைகளை மீட்டு இந்திய கடற்படை தளத்திற்கு எடுத்து வந்தனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இரட்டை மடி வலை பயன்படுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடற்படை கப்பலில் ரோந்து சென்றபோது, இரண்டு படகுகளில் இரட்டை மடி வலை பயன்படுத்துவது தெரியவந்தது. பின் அவர்களை நோக்கிச் சென்றோம். எங்களைக் கண்டவுடன் இரட்டைமடி வலையை பயன்படுத்திய மீனவர்கள் வலையை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை மடி வலை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.