ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த மூன்றாம் தேதி 600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்வளத்துறையிடம் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு, மீன்பிடிக்கச் சென்று நேற்று(ஆகஸ்ட் 4) கரை திரும்பினர்.
இந்நிலையில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான படகும் படகில் சென்ற திரவியம், வப்பா, முனியசாமி, மெல்டன் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் கரை திரும்பவில்லை.
அதனைத் தொடர்ந்து படகின் உரிமையாளர் பாக்கியம் ராமேஸ்வரம் உதவி மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். நேற்று(ஆகஸ்ட் 4) வரை மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், இன்று(ஆகஸ்ட் 5) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 13 மீனவர்கள் மாயமான மீனவர்களைத் தேடி சென்றனர்.
அங்கு நடுக்கடலில் படகு பழுதானதால், தவித்துக் கொண்டிருந்த ஏழு பேரையும் மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்குப் பழுதான படகுடன் அழைத்து வந்தனர். பின்னர் மீன்வளத்துறை கியூ பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.