ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் இந்திரா(48). கணவனை இழந்த இவர் கூலி வேலைசெய்து தனது மகனையும் நான்கு மகள்களையும் வளர்த்து படிக்க வைத்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு, வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்த இந்திரா, உடனே பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இந்திராவின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகளை அவரது பிள்ளைகள் தானமாக அளித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய இந்திராவின் மகன், எனது தந்தை இறந்தபின் கடந்த 13 ஆண்டுகளாக என்னையும், எனது சகோதரிகளையும் கூலி வேலை செய்து வளர்த்த எனது தாய் திடீரென மூளைச்சாவு அடைந்தது எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனது மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகவில்லை. எங்களது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரண நிதியும் வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.
இதையும் படியுங்க:
'உடலுறுப்பு தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை' -விஜய பாஸ்கர்