ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரம் அருகே உள்ள வள்ளுவாடியைச் சேர்ந்த ஆசிரியர் பாலமுருகன் என்பவருக்கும், பூர்ணலிங்க ஈஸ்வரி என்பவருக்கும் இன்று (அக். 30) திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு புதுவிதமாக பேனர் அடிக்க நினைத்த ஆசிரியர் பாலமுருகனின் நண்பர்கள் தற்போது மனிதக் குலத்தை அச்சுறுத்திவரும் கரோனா பெருந்தொற்றைக் கலாய்த்து பேனர் அடித்துள்ளனர்.
அதில், வள்ளுவாடியில் பரபரப்பு ஆசிரியருக்கு தொற்று உறுதி எனவும், தொற்றானவர் பாலமுருகன் என மணமகன் பெயரையும் தொற்றிக் கொண்டவர் என மணமகள் பூர்ணலிங்க ஈஸ்வரி எனவும் தொற்று உறுதியான நாள் என திருமணம் நடைபெறும் தேதியையும், பரவிய இடம் என திருமணம் நடைபெற்ற இடத்தையும் குறிப்பிட்டு உள்ளனர்.
அதற்கும் ஒரு படி மேலே சென்ற நண்பர்கள், அவர்களது பெயரை கரோனா தொற்று அறிகுறிகள், பாதுகாப்பு உபகரணங்களின் பெயரை வைத்து பேனரில் சேர்த்துள்ளனர்.
அதில் இருமல் இளங்கோ, தும்மல் ராஜேஷ், காய்ச்சல் லிங்கேஸ், மூச்சுத்திணறல் முத்து, விழித்திரு விஸ்வா முகக்கவசம் முனீஸ், விலகி இரு விக்கி, சானிடைசர் சபரீ எனவும் இதற்குக் கொலைவெறி கரோனா குரூப் மற்றும் அட்டகாசம் குரூப் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தொற்றுக்கு சிகிச்சையையும் அவர்கள் அதில் குறிப்பிட்டு உள்ளனர். நண்பா நீ போராட வேண்டியது கரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன்.
இந்தக் கரோனா கல்யாண பேனர் சமூக வலைதளத்தில் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டுவருகிறது.