கீழக்கரை வட்டம், ஏர்வாடியில் அரசு மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் முறையான பராமரிப்பில்லாமலும், மனநலம் குன்றிய நிலையில் உள்ளவர்களுக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும், சிகிச்சைபெறுவோருக்கு மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ் நோக்கிலும், மறுவாழ்வு வழங்கிடும் வகையிலும் கூடை பின்னுதல், அகர்பத்தி தயாரித்தல், வீட்டு உபயோக அலங்காரப் பொருள்கள் தயாரித்தல், பினாயில் தயாரித்தல் போன்ற சிறு தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
தற்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் இம்மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, மையத்தில் சிகிச்சைக்காகத் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சி குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தற்போது 47 நபர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அனைவருக்கும் சத்தான உணவு, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மையத்தில் முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி சிகிச்சை பெறுவோரின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம், அரசு மனநல மருத்துவர் பெரியார் லெனின், கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.