முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவரப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் வழங்க காலதாமதமானதால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் மாணவர்களின் உணர்வை மதிப்பதோடு, சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும், அரசாணையை வெளியிட்டுள்ளோம். காலதாமதத்தை வைத்து அரசியல் செய்தால் அது எடுபடாது ” என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவின் அழுத்தம்தான் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அரசாணை’: ஸ்டாலின்