தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு முடித்த பிறகு மைதானம், பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் 10,000 பேர் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரமலான் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதி இல்லை.
இதனால் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து ரமலான் சிறப்புத் தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், ராமநாதபுரத்தில் ரமலானை முன்னிட்டு ஏராளமான இனிப்பு, கார வகைகள் விற்பனையாகும். ஆனால், கரோனா பாதிப்பால் 50 விழக்காடு இனிப்பு, கார வகைகள் மட்டுமே விற்பனையானதால் பேக்கரி தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து ஹமீது சுல்தான் அலி கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் 5000 முதல் 10000 பேர் வரை ஒரே இடத்தில் கூடி ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் இருப்பதால் நாங்கள் அனைவரும் எங்களது வீடுகளில் குடும்பத்தாருடன் தகுந்த இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தி ரமலானை கொண்டாடி வருகிறோம்" என்று கூறினார்.
அதேபோல் கோயம்புத்தூரில் இஸ்லாமிய சகோதரர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை புத்தாடைகள் அணியாமலும், பள்ளிவாசலுக்கு செல்லாமலும், இனிப்புகளை வழங்காமலும் வீட்டில் இருந்தபடி இறைவனை தொழுதனர். இதுபோன்ற ரமலான் பண்டிகையை இதுவரை கொண்டாடியதில்லை என்றும் உறவினர்கள் இல்லாமல் கொண்டாடுவது வருத்தமாக உள்ளதென்றும் அவர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் மக்களின் நலனுக்காக இது போன்று கொண்டாடுவதில் தவறில்லை என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரமலான் தொழுகைக்கு ஒன்றுகூடிய மக்கள்