புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி ஊராட்சியில் சுமார் மூவாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு நான்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குழாய் மூலம் குடிநீர் வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலமாக சேரும் சகதியுமாக மாசுபடிந்த குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இன்று காலை புதுக்கோட்டை கறம்பக்குடி சாலை சம்பட்டிவிடுதி தபால் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆலங்குடி, சம்பட்டிவிடுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, காவல் துறையினர் மேற்கொள்ள முயன்ற சமரச பேச்சுவார்த்தையை, பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.