புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி பகுதியில் நீண்ட காலமாக பட்டியலின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாடு அமைந்துள்ளது. அந்த சுடுகாட்டு பகுதியை ஜெகதீசன், பழனிசாமி என்பவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு அவர்கள் நிலம் எனக் கருதி அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் இருக்கிறது என்று கூட பாராமல் வண்டியை வைத்து மண்ணை போட்டு மூடிவிட்டு அந்த வழியில் தாண்டி யாரும் போக முடியாத அளவிற்கு மண், கல், முள் போன்றவற்றை போட்டு அடைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "தலைமுறை தலைமுறையாக இதே இடத்தில்தான் எங்கள் சமூகத்திற்கு என ஒதுக்கப்பட்ட சுடுகாடு எனக் கருதி சடலங்களை அடக்கம் செய்து வருகிறோம். ஆனால் தற்போது ஜெகதீசன், பழனிசாமி அவர்களது நிலம் எனக் கூறிக்கொண்டு சுடுகாட்டை மூடிவிட்டனர். எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நிலத்தை அளந்து கொடுத்து எங்களுக்கு உதவ வேண்டும். மூன்று கிராமங்களில் உள்ள பட்டியலின மக்களுக்கு இதுதான் சுடுகாடு. இதுகுறித்து மனு கொடுத்திருக்கிறோம் அலுவலர்கள் விரைவில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்தனர்.ஊராட்சி செயலாளர் கருப்பையா தெரிவித்தபோது, "இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டை வைத்து மனு தாலுகா அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் வந்து நிலத்தை அளவு எடுக்கிறோம் எனக் கூறி விட்டு இன்னும் வரவில்லை. விரைவில் வந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்." எனக் கூறினார்.இதையும் படிங்க: பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை