பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மதுரா குடிகாடு கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு உள்ள நியாய விலைக் கடையில் கடந்த 5 மாதமாக மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
நியாயவிலைக் கடை பணியாளர்களிடம் மண்ணெண்ணெய் கேட்டபோது, அதிகாரத் தொனியில் பேசியதாக குற்றஞ்சாட்டினர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரா குடிகாடு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து முற்றுகையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களை அழைத்து பேசி மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்