விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. மழையை நம்பியே இம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சிறிய வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் சிறிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவதால், பெரம்பலூர் சிறிய வெங்காயத்திற்கு என்று தனிப் பெயர் உண்டு. இதனிடையே, நடப்பாண்டில் கடுமையான வறட்சியின் காரணமாக சாகுபடி செய்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் விவசாய பெருமக்கள், கிணறுகள் தோண்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், வரும் பருவ மழையை எதிர்பார்த்து அவர்கள் நிலத்தை உழுது காத்திருக்கின்றனர். பருவமழை கை கொடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு தங்களால் விவசாயம் செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கையுடன் மழை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.