பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர் பெரிய ஏரியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி 1.4 கி.மீ தூரத்திலும் தடுப்புச் சுவர் நீளம் 73.50 மீ நீளத்திலும் மதகு பழுது பார்க்கும் பணி, எல்லைக்கல் நடும் பணி என மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், குரும்பலூர் கிராமத்தில் தூர்வாரும் பணி 2 கி.மீ நீளத்திலும், தடுப்புச் சுவர் 39.00 மீ நீளத்திலும், எல்லைக்கல், மதகு பழுதுபார்த்தல் என ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.
பெரம்பலூர் ஏரி புனரமைக்கப்படுவதால் 0.262 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதோடு, 49.34 ஹெக்டேர் விளைநிலங்களும் பயன்பெறுகின்றன. அதே சமயம் குரும்பலூர் ஏரி புனரமைக்கப்படுவதால் 0.282 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்படுவதோடு, 92.870 ஹெக்டேர் விளைநிலங்களும் பயன்பெறும்.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.